கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 50.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதம் 35.3 சதவீதமாக சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கு உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிக உயர்வான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டமையே பிரதான காரணமாக அமைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச்சில் 47.6 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஏப்ரலில் 30.6 சதவீதமாகவும், மார்ச் மாதம் 51.7 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஏப்ரல் மாதம் 37.6 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஏப்ரல் மாதம் (-1.39) சதவீதமாகப் பதிவானதுடன், இது கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணில் இதுவரையிலும் பதிவான அதிகூடிய மாதாந்த வீழ்ச்சியாகும். இதற்கு உணவல்லாப்பொருட்களின் விலைகளில் (-1.37) சதவீதமாக அவதானிக்கப்பட்ட விலைவீழச்சி காரணமாக அமைந்துள்ளது.
அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மார்ச்சில் 39.1 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 27.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், அண்மையகாலங்களில் பின்பற்றப்பட்டுவரும் இறுக்கமான நாணய மற்றும் இறைக்கொள்கையின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கமானது இவ்வாண்டு முழுவதும் தொடருமெனவும், இவ்வாண்டின் பிற்பகுதியில் பணவீக்கமானது ஒற்றை இலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவரப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.