Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 3 நோய்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

இலங்கையில் 3 நோய்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

1 minutes read

இலங்கையில் டெங்கு, மலேரியா, எலிக் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்துக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் தற்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன.

எனவே, 48 மணி நேரத்துக்கு மேலாகக் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையில் 30 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மழைக்காலத்தில் எலிக்காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, இரண்டு பருவமழைகளைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் உச்சத்தை அடைவதால், பருவகால மாறுபாட்டால் நோய் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இந்தச் சூழலில், சுகாதார அதிகாரிகள், குறிப்பாக உள்ளங்கால் அல்லது கால்களில் காயங்கள் வெளிப்பட்டால், தண்ணீர் அல்லது சேற்றில் இறங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், தசைவலி, நிறம் மாறுதல் போன்ற நோயின் அறிகுறிகள் இருந்தால் அரச மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மலேரியா எதிர்ப்புச் பிரசாரத்தின் பணிப்பாளர், வைத்தியர் சம்பா அலுத்வீர கூறுகையில்,

“மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.

2022 இல் மொத்தம் 37 மலேரியா நோயாளிகள் பதிவாகினர். இருப்பினும், ஜனவரி 2023 முதல் 17 மலேரியா நோயாளிகள் உள்ளனர். அனைத்து நோயாளிகளும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களாவர்.

அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவர் மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More