தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சீலரத்ன தேரர் தலைமையிலான சிறு குழுவினர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார், கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டைச் சுற்றிவளைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் இதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், சீலரத்ன தேரர் தலைமையிலான சிறு குழுவினர் இன்று அங்கு சென்று கஜேந்திரகுமார் எம்.பிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அவர்கள் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்துப் பொலிஸாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.