September 22, 2023 7:02 am

அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா | தாமரைச்செல்விக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் செப்டெம்பர் 10 ஆம் திகதி, சிட்னியில் நடத்திய
23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் , படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால இலக்கியச்சேவையை பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிட்னியில் தூங்காபி (Toongabbie) சமூக மண்டபத்தில் காலை அரங்கு தமிழ்மொழி வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசிய கீதத்தை தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் இசைத்துப் பாடினர்.

விழாவின் வரவேற்புரையை கலாநிதி கார்த்திகா கணேசர் நிகழ்த்தினார். அதன்பின் பிரதம அதிதி கம்பர்லாந்து நகர மேயர் லீஷா லேக்கை (Lisa Lake , Mayor, Cumberland City Council) கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் வரவேற்று உரையாற்றினார்.

அதன்பின் இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கான சான்றிதழ்கள் பிரதம அதிதி கம்பர்லாந்து மேயரால் வழங்கப்பட்டது. இந்த எழுத்தாளர் விழாவில் முக்கிய நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப்படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

தாமரைச்செல்வியின் இலக்கியச்சேவையை பாராட்டி, சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் தற்போதைய துணை நிதிச்செயலாளருமான எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆய்வுரை நிகழ்த்தினார்.

புத்தக கண்காட்சி – நூல் வாசிப்பு :

இவ்விழாவில் அவுஸ்திரேலியாவில் வதியும் பல எழுத்தாளர்களின் நூல்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் வசியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வும் இவ் எழுத்தாளர் விழாவில் நடைபெற்றது. நொயல் நடேசன் எழுதிய தாத்தாவின் வீடு நாவலுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வை ரஞ்சகுமார் ஆற்றினார்.
தேவகி கருணாகரன் எழுதிய அவள் ஒரு பூங்கொத்து சிறுகதை தொகுப்புக்கான நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வு உரையை சௌந்தரி கணேசன் ஆற்றினார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்த ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ கட்டுரை தொகுப்பு நூலுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வு உரையை
ம. தனபாலசிங்கம் ஆற்றினார். லெ. முருகபூபதி எழுதிய சினிமா பார்த்ததும் கேட்டதும் கட்டுரை தொகுதிக்கான உரையை கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆற்றினார். அத்துடன் சந்திரிக்கா சுப்பிரமணியனின் பெண் நூறு நூலின் வாசிப்பு அனுபவ உரையை இந்துமதி ஶ்ரீநிவாசன் ஆற்றினார்.

எழுத்தாளர் விழாவின் மாலை அரங்கில் ‘மலையகம் 200’ சிறப்பு நிகழ்வை வாசுகி சித்திரசேனன் தலைமை தாங்கி நடாத்தினார். இதன் போது ‘மலையகம் 200’ எழுச்சி யாத்திரை ஒளிப்பதிவும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் நிகல்கால எழுத்தாள ஆளுமைகளின் காணலைகளும் காண்பிக்கப்பட்டது. மல்லியப்பு திலகர், கனடா மீரா பாரதி, ஆகியோரின் காணலை பதிவுகள் காண்பிக்கப்பட்டன.

மாலை அரங்கின் இறுதியில் தமிழ் பாலர் பள்ளி இளஞ்சிறார்களின் இசை நாட்டியமும் மனதை கவர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையை அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் ஆற்றினார். இந்நிகழ்வில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்களும், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்