நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்திற்கு புதன்கிழமை (04) வருகை தந்திருந்த ஜனாதிபதி, சபையில் விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நான் சரியென்று இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் கூறுகின்றனர். அப்படியென்றால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். ஏன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியாது?.
அத்துடன், நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கிறது. இந்த நேரத்தில் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்தே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் நாம் அனைவருக்கும் ஒரே அச்சுறுத்தலே உள்ளது. அதில் இருந்து மீள்வதற்கு வேறு வேலைத்திட்டங்கள் இருக்குமாக இருந்தால் அதனை கூறுங்கள். ஆனால் யாரும் வேலைத்திட்டங்களை முன்வைக்கவில்லை.
தற்போதைய கொள்கைத் திட்டங்களை இரண்டு தரப்பிலும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதால் இரண்டு தரப்பினரும் ஒன்றாக வேலை செய்து நாட்டுக்கு காட்டுவோம் என்றார்.