Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருளால் மரணங்கள் அதிகரிக்கும் | பலர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

போதைப்பொருளால் மரணங்கள் அதிகரிக்கும் | பலர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

1 minutes read

நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கண்டி வைத்தியசாலையின் விசேட மனநல வைத்தியர் கிஹான் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இந்த தரவுகளில் வெளிப்படுத்தப்படாத அதிகளவானோர் சமூகத்தில் காணப்படலாம் என கருதுகின்றோம்.

புள்ளிவிபரங்களை நோக்கும் போது சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பதோடு இவர்களில் அதிக எண்ணிக்கையானோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி அதன்மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 16 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட சுமார் 28 வீதமான சிறுவர்கள், மற்றும் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட ஏதேனும் ஒருவகை போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலைமை நாட்டில் பாரிய பேரழிவை ஏற்படுத்த கூடியது.

மேலும் பாடசாலையிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் மாத்திரைகள், தடுப்பூசிகள் சமூகத்தில் பாரியளவில் விற்பனை செய்யப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது 44 ஆயிரத்து 241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 100 கிலோ 932 கிராம் ஹசீஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More