தமிழ்க் கட்சிகளின் அழைப்புக்கிணங்க வடக்கு – கிழக்கில் இன்று ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.
இன்றைய ஹர்த்தால் வெற்றியடைய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று 8 தமிழ்க் கட்சிகள் கூட்டாகக் கோரியுள்ளன.
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதைக் கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்பவெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்துக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளோம். எனவே, ஹர்த்தால் இன்று வெற்றியடைய சகல தரப்பினரும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து கோரியுள்ளன.