கந்து வட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நான்குபேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆட்சியாளர்களை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக தன் மீது போடப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பதாக பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்..
ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்குள்ளாகும் கருத்து சுதந்திரத்தை நேசிக்க கூடிய ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய தீர்ப்பை அளித்திருக்கிறது நீதிமன்றம்.
மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் இளங்கோவன் அவர்களுக்கும், நெல்லை மாவட்ட நீதியரசர் ராமதாஸ் அவர்களுக்கும் நன்றிகள்.
அரசுக்கு எதிராக கார்ட்டூன் வரைந்த மாபெரும் குற்றத்திற்காக , ஒரு பயங்கரவாதியை கைது செய்வதுபோல் வீடு புகுந்து என் மனைவி பிள்ளைகள் கண் முன்னே சட்டையைப் பிடித்து இழுத்து சென்ற நாளை எப்படி என்னால் மறக்க முடியாததோ.. அதுபோல் அவ்வழக்கில் விடுதலை ஆன இந்நாளும் மறக்க முடியாதது.
என்னை கைது செய்ய சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கும், கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும், 7 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
ஊர் கூடி தேர் இழுப்பதுபோல் என் விடுதலைக்கு துணை நின்று குரல் கொடுத்த,
என் சக ஊடக நண்பர்கள் , கார்ட்டூனிஸ்ட்டுகள் ,
தலையங்கம் எழுதிய பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பினர் , கட்டணமே வாங்காமல் வழக்கு நடத்திய தோழர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்ணிய தோழர்கள், என் சமூக வலைதள நண்பர்கள் , என் கோடுகளுடன் எப்போதும் துணை நிற்கும் என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் என அனைவரது துணையால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது..
என்ன வார்த்தைகள் சொல்லியும் கைமாறு செய்துவிட முடியாது..
துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..
நின்றெரிந்த குழந்தை தெய்வங்கள்
மதி சரண்யா..
அட்சய பரணிதாவை கண்ணீருடன் வணங்குகிறேன்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
19-4-2021