ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் இருந்து மருத்துவ உதவி வழங்கும் சட்டத்தின் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்ட அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நான்கு நட்சத்திர விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதே சமயம், இந்த சர்ச்சையின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் மோசமான நிலையும் அவர்கள் புறக்கணிப்படுவதை பற்றிய முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
முன்னதாக, மருத்துவ உதவி வழங்கும் சட்டத்தின் மூலம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 45 அகதிகள் நட்சத்திர விடுதியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக ஆஸ்திரேலிய அரசு வாரமொன்றுக்கு 410,000 டாலர்கள் செலவிடுவதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நான்கு நட்சத்திர இடங்களாக சொல்லப்படும் விடுதிகள் மற்றும் பிரிஸ்பேன் குடியேற்ற இடைத்தங்கல் முகாமை பார்வையிட்ட அகதிகளின் வழக்கறிஞர்கள், அங்குள்ள நிலைமை மிகவும் மோசமானது எனத் தெரிவித்திருக்கின்றனர்.
சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்ட அகதிகளுக்கு, ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் சிகிச்சை என்பது மருத்துவ தேவையின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
‘மொழிபெயர்ப்பாளர் உதவி கிடைப்பதில் சிக்கல், சிகிச்சை வழங்குவதில் தாமதம், அகதிகள் சிகிச்சையை மறுப்பதாக கூறுவது’ என பல விமர்சனங்கள் சொல்லப்பட்டுள்ளது.
பல் மருத்துவம், மனநல சிகிச்சை வழங்குவதற்கான முதல்கட்ட அனுமதியை மருத்துவர்கள் ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் பெற வேண்டும் என்ற நிலை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சில விமர்சனங்கள்:
*தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஓர் அகதி மருத்துவமனையில் வைக்கப்படாமல், விடுதியில் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
*அகதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் நான்கு நட்சத்திர விடுதியாக இருந்தாலும், அவர்களுக்கு அந்த தரத்திலான் உணவுகள் வழங்கப்படுவதில்லை. ஆறிப்போன உணவே வழங்கப்படுகின்றது.
*விடுதியை சுற்றிலும் அதிகாரிகள் அகதிகளை கண்காணித்து வருகின்றனர்.
*பெண் அகதிகள் அறைகளுக்குள் திடீரென அதிகாரிகள் புகுந்து விடுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அகதிகள் தங்குமிடங்களை ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம், ஐ.நா. உள்ளிட்டவை பார்வையிட்ட பிறகு இந்த நிலையில் சிறிது முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான அகதிகள் நம்பிக்கையற்ற நிலையில் வாழும் சூழல் தொடர்வதாக தெரிவித்திருக்கின்றனர் அகதிகள் நல செயல்பாட்டாளர்கள்.