சீனாவின் வுஹான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சொற்போர் நிலவி வருகிறது.
குறிப்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி கடந்த சில நாளாக கொரோனா வைரசை ‘சீனா வைரஸ்’ என மேற்கொள் காட்டி பேசிவருகிறார். ஆனால், அமெரிக்க ராணுவம் தான் வுஹான் நகரத்தில் இந்த வைரஸை பரவவிட்டதாக சீனா குற்றம் சாட்டிவருகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளார்களை சந்தித்த அமெரிக்கா ஜனாதிபதி ,இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த வைரஸ் தொடர்பான விவரங்களை சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே (வுஹான் நகரம்) கட்டுப்படுத்தியிருக்கலாம். வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
வைரஸ் குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விவரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.
இந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எப்பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது இந்த வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான நிலையாகும் என தெரிவித்துள்ளார்.