சீனாவில் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதில் அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள் சீனாவை காட்டிலும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக உலகளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பரவியவர் அதிகம் பேர் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வேகமாக நகர்ந்து வருகிறது.
அதேபோல் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,500 பேரை எட்டியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திணறி வருகிறது.
முக கவசம் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தப்ப முடியும் என்று நம்பப்படுவதால் பெரும்பாலான நாடுகளில் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவிலும் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது.
இந் நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் முக கவசங்கள் உள்ளிட்ட எந்தவொரு மருத்துவ உபகரணங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.
அவ் உத்தரவில் அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிகமான மருத்துவ பொருட்களை வழங்க வேண்டும். உள்நாட்டு பயன்பாட்டிற்கு இந்த பொருட்கள் உடனடியாக தேவை என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சீனாவில் இயங்கி வரும் 3M என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஜேர்மனி முக கவசங்களை ஓர்டர் செய்திருந்தது. அதன்படி அந் நிறுவனம் விமானம் மூலம் முக கவசங்களை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் முக கவசங்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும், அமெரிக்கா அதனை பறித்துக் கொண்டதாகவும் ஜேர்மனி அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பேர்லினின் உள்துறையமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் ( Andreas Geisel ) கூறியதாவது:-
3M நிறுவனத்திடம் 2 லட்சம் N95 முக கவசங்கள், 1 லட்சத்து 30 ஆயிரம் அறுவை சிகிச்சை முக கவசங்கள் மற்றும் 6 லட்சம் கையுறைகள் ஆகியவற்றை ‘ஓர்டர்’ செய்திருந்தோம்.
இவை அனைத்தும் விமானம் மூலம் சீனாவிலிருந்து தாய்லாந்து வழியாக ஜேர்மனிக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாய்லாந்து தலைநகர் பேங்கொக் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் இவை அனைத்தையும் பறித்துக் கொண்டனர். இது ஒரு நவீன ரகமான திருட்டாகும். சர்வதேச வர்த்தக விதிகளை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பின்பற்றவில்லை. இது கண்டனத்துக்குரியதாகும் என கூறினார்.
-வணக்கம் இலண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-