உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8,452 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வருகிறது.
இதனையடுத்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடீனை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்காவுக்கு உதவ ரஷ்ய ஜனாதிபதி புடீன் முன்வந்தார்.
இதற்காக, செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் மிகப்பெரிய பொருட்கள் ஏற்றும் விமானம் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நியூயோர்க் நகரை வந்தடைந்த ரஷ்ய விமானத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் அமெரிக்காவின் பல்வேறு வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், 2014 மற்றும் 2015ம் ஆண்டு காலப்பகுதியில் உக்ரேன், கிரிமியா விவகாரங்களின் போது அமெரிக்கா அரசாங்கம் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
ரஷ்யாவிலுள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அமெரிக்காவின் நிறுவனங்களை வர்த்தகம் செய்ய தடை விதித்தது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளையும் ரஷ்யாவின் நிறுவனங்களோடு வர்த்தகம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியது.
அமெரிக்கா விதித்த தடைகளை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா ரஷ்யாவின் நிறுவனங்கள் மீது விதித்த வர்த்தகத் தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில், நியூயோர்க் நகருக்கு ரஷ்யா அனுப்பிய மருத்துவ உபகரணங்களில் வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை அமெரிக்காவின் வர்த்தகத்தடை பட்டியலிலுள்ள UPZ நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
UPZ என்ற நிறுவனத்தை கடந்த 2014ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா வர்த்தகம் தடை செய்யப்பட்ட பட்டியலில் தற்போதும் இந் நிறுவனத்தை வைத்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடீன் அமெரிக்காவுக்கு வழங்கிய மருத்துவ உபகரணங்களில் வென்டிலேட்டர் UPZ நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்படத்தக்கது.
-வணக்கம் இலண்டனுக்காகஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-