Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனாவின் தோற்றம் பற்றிய வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கொரோனாவின் தோற்றம் பற்றிய வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

2 minutes read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ ( Marco Rubio ) தலைமையிலான எட்டு செனட்டர்கள் குழு நேற்று முன்தினம் கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள், “கொரோனா வைரஸின் தோற்றம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முடிவு ஆகியவை பற்றிய வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்புக்கு எழுதிய அந்த கடிதத்தில்,  கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* சீனாவின் வுஹான் நகரத்தில்  தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோயை ஆரம்பத்திலிருந்தே சீன கம்யூனிஸ்டு கட்சி மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும் மட்டுமின்றி அமெரிக்காவையே நேரடியாக குற்றம் சாட்டுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
* கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், அது எங்கே தோன்றியது என்பது பற்றியும், உலக சுகாதார ஸ்தாபனம்  உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை சீனா தனக்கு ஆதரவாக தவறாக பயன்படுத்துவது பற்றியும், உண்மையான, முழுமையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
* இது தொடர்பாக நமது நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நமது வெளியுறவுச் செயலாளர்  மைக் பாம்பியோவும், அமெரிக்க நிர்வாகமும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கொரோனா வைரஸூக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்காக சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதற்காக நீங்கள் ஒரு உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும்.
* விசாரணையானது, கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, உலக சுகாதார ஸ்தாபனம் , முடிவு எடுத்தது பற்றிய விரிவான புரிதலுக்கும் வழி வகுக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை மறைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு சீனாவிடம் இருந்து அழுத்தம் வந்ததா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையானது வெளிப்படையாக இருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இப்போது இந்த விவகாரத்தில் சர்வதேச அளவிலான விசாரணை வந்தால், அது சீனாவுக்கும், உலக சுகாதார ஸ்தாபனத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More