சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் வெளிப்பட்டு தற்போது, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.அதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனா மீது அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனாவை ‘சீனா வைரஸ்’ என்று தெரிவித்து வந்தார். கொரோனா வைரஸ் குறித்து சீனா முன்கூட்டியே எதுவித தகவலையும் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
கடந்த சனிக்கிழமை, நிருபர்களை சந்தித்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், கொரோனாவை திட்டமிட்டே சீனா பரப்பி விட்டிருந்தால், அந்நாடு பின்விளைவுகளை கடுமையாக சந்திக்க வேண்டி இருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
சீனாவுடனான வர்த்தக பேரம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. எல்லாமே மகிழ்ச்சி அளித்தது. பின்னர், பிளேக் (கொரோனா வைரஸ்) பற்றி தெரிய வந்தது. அது தெரிய வந்ததிலிருந்து எனக்கு மகிழ்ச்சி இல்லை.
இந்த நோய் எப்படி உருவானது? என்று விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அமெரிக்கா அனுப்பும். சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்புவது பற்றி சீனாவிடம் நீண்ட நாள்களுக்கு முன்பே பேசினோம்.
இப்போது அனுப்ப விரும்புகிறோம். அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், நிச்சயமாக சீனா அழைப்பு எதுவும் விடுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையின் அடிப்படையில், உண்மையை நாங்கள் கண்டுபிடிப்போம் என ட்ரம்ப் கூறினார்.
-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-