கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைய உதவும் ரெம்டிசிவிர் மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசர ஒப்புதல் அளித்துள்ளது.
கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தைக் கொரோனா நோயாளிகளுக்கு ஊசிமூலம் நரம்புவழியாகச் செலுத்திச் சோதனை செய்ததில், சராசரியாக 11 நாட்களில் குணமடைவதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இந்த மருந்துக்கு அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது. இயல்பாக ஒரு மருந்தைச் சோதனை செய்த நாளில் இருந்து 90 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் தெரிவித்தார்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தோருக்கும், சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுவோருக்கும் மட்டுமே ரெம்டிசிவிர் மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைலீட் சயின்சஸ் நிறுவனம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்குப் பத்து நாள் சிகிச்சைக்குத் தேவைப்படும் 15 லட்சம் டோஸ் மருந்தை அமெரிக்க அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.