அமெரிக்காவில் கடந்த இருதினங்களுக்கு முன் குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளதால் அமெரிக்கர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் 700 ஆக உயிரிழப்பு, நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500 ஆக அதிகரித்தது. இதனையடுத்து அமெரிக்காவில் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 300ஐத் தாண்டியுள்ளது. மேலும் 16 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ்லாந்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் 15 வரை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை அங்கு பெருந்தொற்றுக்கு ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டும், 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இத்தாலியில் லோம்பார்டி மாகாணத்தில் வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக அதிகரித்துள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் நாளொன்றுக்கு 260 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய்த் தொற்றினைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், தடுப்பூசியை உருவாக்கவும் சீனாவுடன் இணைந்து செயல்படத் தயார் என கனடா அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் ஸ்பெயினின் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக மாறக்கூடும் என்று அந்நாட்டு அவசர சுகாதாரத்துறை இயக்குநர் ஃபெர்னாண்டோ சைமன் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டில் கொரோனாவைக் கையாளுவதற்கும், பொது முடக்கத்தை சீர் செய்வதற்கும் புதிய அமைப்பை உருவாக்க அந்நாட்டு பிரதமர் திட்டமிட்டுள்ளார்.<