அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்கத்திற்கு ஆயிரத்து 300 பேர் உயிரிழந்ததால் அங்கு, இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.
சீனாவில் இருந்து அமெரிக்காவில் பரவி உலகம் முழுவதும் பல்லாயிரம் உயிர்களைக் காவு வாங்கிய கொரோனாவால் நேற்று ஒரேநாளில் 24 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் ஆயிரத்து 300 பேர் உயிரிழந்ததால், அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 97 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மிச்சிகன் மாகாணத்தில் பொதுமுடக்கம் ஜூன் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் நியு ஹாம்ப்ஷையர் மாகாணத்தில் கடற்கரைப் பகுதிகளை ஜூன் ஒன்றாம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் ஜூன் 5 முதல் பகுதியளவு நிறுவனங்களைத் திறக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரு நாட்டில் நோய்த் தொற்று அதிகமாவதால் தேசிய அளவிலான பொதுமுடக்கம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.