அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளிவிவகார அமைச்சு உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில் ஜோ பைடன் தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி, வெளிவிவகார அமச்சராக அன்டனி பிளின் கென்னையும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லினையும் நியமிக்கவுள்ளார்.
மேலும் முன்னாள் அமெரிக்க தலைமை தூதுவர் ஜோன் கெரியை தனது சிறப்பு தூதராகவும், அலெஜான்ட்ரோ மயோர்காசை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராகவும் தெரிவு செய்துள்ளார்.
இதேவேளை முன்னாள் துணை சி.ஐ.ஏ. இயக்குநரான அவ்ரில் ஹைன்ஷை தேசிய புலனாய்வு பணிப்பாளராகவும் அவர் தெரிவு செய்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன