14 ஆவது ஐ.பி.எல். தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிளென் மெக்ஸ்வெல் இந்திய மதிப்பில் 14.25 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் எடுக்கப்பட்டார்.
14 ஆவது ஐ.பி.எல். தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த ஏலப் பட்டியலில் 164 இந்தியர்களும் 129 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
அதிகப்படியான வெளிநாட்டு வீரர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து மிகச் சிலரே இந்த ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான ஏலத்தில் கிளென் மெக்ஸ்வெல்லை எடுப்பதற்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெஙகளூரு மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கிடையில் பெரும் போட்டி காணப்பட்டது.
இறுதியில் கிளென் மெக்ஸ்வெல் இந்திய மதிப்பில் 14.25 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் எடுக்கப்பட்டார்.
இவரைத் தவிர மற்றொரு அவுஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2.20 கோடி இந்திய ரூபாவுக்கு க ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மேலும், அவுஸ்திரேலிய அணித்தலைவரான ஆரோன் பின்ச் அடிப்படை விலையான 2 கோடி ரூபாவுக்கு எடுக்க எந்த அணியும் முன்வராதமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதேவேளை, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான மொயீன் அலி 7 கோடி ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மேலும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ரோய் ஆகியோரும், அண்மைக்காலமாக பிரகாசிக்கத் தவறிய இந்திய அணியின் சகலதுறை வீரரான கேதார் ஜாதவ்வும் முதற்கட்ட ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.