வாஷிங்டன்: ‘விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றும் போது, உயிர் பிரிய நேரமாவதால், இந்த வகையிலான தண்டனை கூடாது’ என, அமெரிக்காவில், மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்திய போதிலும், அதைப் பற்றி கண்டுகொள்ளாமல், நேற்று மூன்று பேருக்கு, விஷ ஊசி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நம் நாட்டில் மற்றும் சில நாடுகளில், மரண தண்டனை, தூக்கிலிடுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில், கொடூர கொலையாளிகளுக்கு, விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஏப்ரலில், அமெரிக்காவின் ஒக்லஹாமா என்ற பகுதியில், கற்பழிப்பு கொலையாளி ஒருவனுக்கு விஷ ஊசி தண்டனை நிறைவேற்றப்பட்ட போது, அந்த நபர் சாக, கூடுதல் நிமிடங்கள் பிடித்தது. விஷ ஊசி போட்டதால், வலியில் அவன் துடித்ததை பார்வையாளர்கள் பார்த்து மன வேதனை அடைந்தனர். அதையடுத்து, ‘விஷ ஊசி தண்டனை நிறைவேற்றக் கூடாது’ என, மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். இதற்காக பயன்படுத்தப்படும், ‘பென்டோபார்பிடால்’ எனப்படும் விஷ மருந்தை, அமெரிக்காவுக்கு வினியோகிக்க, ஐரோப்பிய நாடுகள் மறுத்து விட்டதால், வீரியம் குறைந்த விஷ ஊசி மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை, அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ‘இத்தகைய தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும்’ என, சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வந்ததை கண்டுகொள்ளாத அமெரிக்கா, நேற்று, மூன்று பேருக்கு விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றியது. சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற, 58 வயது நபர் மற்றும் இரண்டு பெண்களை கொன்ற, 43 வயது நபருக்கு, மிசோரி நகர சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மற்றொருவர் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.