வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி தத்தளித்து வந்த 30 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேச கடலோர காவல்படை மீட்டுள்ளது.
வங்கதேச அகதிகள் முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவை நோக்கி கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வது வாடிக்கையான ஒன்றாக நிகழ்ந்து வருகின்றது. இவ்வாறு முகாம்களிலிருந்து 20 பெண்கள், 5 ஆண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 30 ரோஹிங்கியா அகதிகளுடன் வெளியேறிய படகு ஒன்று கடல் கொள்ளையர்களின் கையில் சிக்கியிருக்கின்றது.
“இப்படகினை கொள்ளையர்கள் தாக்கி அகதிகளிடம் இருந்து விலை மதிப்பான பொருட்கள் அனைத்தையும் பறித்துச் சென்றது மட்டுமின்றி படகின் இயந்திரத்தையும் சேதப்படுத்தி சென்றிருக்கிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார் கடலோர காவல்படையின் பேச்சாளர் அமிரூல் ஹக்கியூ.
“ஆழ்கடலில் உள்ள பெரிய படகிற்கு அவர்கள் செல்ல திட்டமிட்டிருந்ததால் அவர்கள் போதிய உணவின்றி கடலில் தத்தளித்து வந்தனர். நாங்கள் அவர்களை மீட்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்,” என மற்றொரு வங்கதேச அதிகாரி ஏஎப்பி ஊடக நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது மீட்கப்பட்ட இந்த அகதிகள், பாஷன் சர் எனும் ஆபத்தான தீவுக்கு கொண்டு செல்லப்படுவதாக வங்கதேச காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள கூடிய இந்த ஆபத்தான தீவுக்கு 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை இடமாற்றும் வங்கதேசத்தின் திட்டம் சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் குறி வைப்பதை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள முகாம்கள் அமைந்திருக்கும் காக்ஸ் பஜார் பகுதி அருகே உள்ள Teknaf பகுதியின் கவுன்சிலர், “கொரோனா பெருந்தொற்று சூழலினால், மிகக் குறைந்த அளவிலான மீன்பிடி படகுகளே கடலுக்கு செல்கின்றன. இந்த நிலைமையை பயன்படுத்தி ஆட்கடத்தல்காரர்கள் மக்களை கடத்துகின்றனர்,” எனக் கூறியிருக்கிறார்.