கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.
பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து கூறுகையில், மாம்பழ வகைகளான ரத்னா மற்றும் அல்போன்சா ஆகியவற்றை கலப்பினம் செய்து கொட்டையில்லா மாம்பழத்தை தாங்கள் விளைவித்துள்ளதாக கூறினார். இதற்கு சிந்து என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இதனை விளைவிக்கும் சோதனை முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார். தங்களது முயற்சி வெற்றி பெறுவதுடன், கொட்டையில்லா மாம்பழங்களின் தரத்தையும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் படேல் மேலும் கூறினார்.
இதனை பண்ணைகளிலும், வீட்டிலும் கூட பயிரிட முடியும். தங்களது முதல் சோதனை முயற்சி மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள மண்டல பழ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றதாக கூறிய படேல், மூன்று ஆண்டுகளில் நல்ல பழங்கள் காய்த்ததாக தெரிவித்தார். 200 கிராம் எடையுள்ள இந்த மாம்பழம் ஒவ்வொன்றிலும் நார்கள் மிக குறைவாக காணப்படுகிறது. ஆக கொட்டையில்லா மாம்பழங்களை இனி மக்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழலாம்.