துபாய்:
ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன.
7-வது டி20 உலக கோப்பை போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டியது கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு (2022) அங்கு நடக்கிறது.
இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்தப் போட்டி கொரோனா பாதிப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி தெரிவித்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.
இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது .
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 70 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது .ஓமனில் நடைபெறும் போட்டியை 3000 ரசிகர்கள் வரை பார்க்க அனுமதிக்கப்படலாம் என்று ஐ.சி.சி. தெரிவித்தது.