அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தினால் சிறந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் – ஆசிரியர்களிடம் கோருவதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக இலங்கையிலுள்ள மாணவர்கள் மாத்திரமின்றி முழு உலகிலுமுள்ள மாணவர்களது கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிப்படைந்துள்ளன.
எனினும் இலங்கையிலுள்ள மாணவர்கள் கொவிட் தொற்றினால் மாத்திரமின்றி ஸ்டாலின் போன்றவர்களாலும் தமது கல்வியை இழந்துள்ளனர்.
நாட்டிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டுமே தவிர , மாணவர்களின் கல்வியை 40 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சிக்கக் கூடாது.
எனவே பாடசாலை மாணவர்கள் குறித்து சிந்திக்குமாறு ஸ்டாலின் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். அவர்களது பிள்ளைகளுக்கு இரண்டு ஆண்டுகள் கல்வி இல்லாமலாக்கப்படும் பட்சத்தில் நிலைமை என்னவாகும்?
எனவே மாணவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குமாறே கோருகின்றனர்.
மாணவர்களின் கல்வியை இடைநிறுத்தி அவர்களை பின்னோக்கி கொண்டு செல்ல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பணத்திலேயே நிதி வழங்கப்படுகிறது.
கொவிட் நிலைமை காரணமாக அனைவரும் நெருக்கடியிலுள்ளனர். எனவே அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைகப்பட்டுள்ள சிறந்த யோசனையை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.