இந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) ஆரம்பமான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவினால் பெறப்பட்ட சுமாரான மொத்த எண்ணிக்கைக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
துடுப்பாட்டக்காரர்களின் கவனக்குறைவும் தவறான துடுப்பாட்ட வியூகமும் இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணமானது.
ஆரம்ப வீரராக களம் இறங்கிய குசல் மெண்டிஸ் (2), 3ஆம் இலக்க வீரர் லஹிரு திரிமான்ன (8) ஆகிய இருவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்.
மொஹம்மத் ஷமியின் பந்துவீச்சை சரியாக தடுத்தாடத் தவறிய அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (4) போல்ட் ஆனார்.
தனஞ்சய டி சில்வா 10 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹம்மத் ஷமியின் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ரிஷாப் பன்ட் கேள்வி எழுப்பியபோது தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்கவில்லை என மத்தியஸ்தர் அறிவித்தார். ஆனால், ரிஷாப் பன்ட் விடாப்பிடியாக ரிவியூ செய்யுமாறு ரோஹித் ஷர்மாவிடம் மீண்டும் மீண்டும் கூறினார். ஷமியோ பந்து வெளியில் செல்வதுபோது சமிக்ஞை செய்தார்.
ஆனால், ஷர்மா ரிவியூ கோரியதை அடுத்து தொலைக்காட்சி சலன அசைவுகளில் பந்து விக்கெட்டை பதம்பார்ப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர் தனது தீர்ப்பை மாற்றி தனஞ்சய ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
சரித் அசலன் வந்த வேகத்திலேயே 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மறு முனையில் திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபொது அஷ்னின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
ஆட்டநேர முடிவின்போது திக்வெல்ல 13 ஓட்டங்களுடனும் இராகாப்பாளன் லசித் எம்புல்தெனிய ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் ஷமி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி அதன் முதலாவது இன்னிங்ஸில் சகல விக்டெக்ளையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது.
ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி பெற்ற அரைச் சதமே இந்தியாவை ஓரளவு கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றது.
ஆரம்ப வீரர் மயங்க் அகர்வால் அவசரமாக ஒரு ஓட்டத்தை எடுக்க முயற்சித்து ரன் அவுட் முறையில் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது லசித் எம்புலதெனியவின் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஹனுமா விஹாரியும் விராத் கோஹ்லியும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 47 ஓட்டங்ளைப் பகிர்ந்திருந்தபோது ஹனுமா விஹாரி, ப்ரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து நடையைக் கட்டினார்.
அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லி 23 ஓட்டங்கள் பெற்றநிலையில் தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் களம் விட்டகன்றார்.
இந் நிலையில் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 126 ஓட்டங்களாக உயர்த்தியபோது ரிஷப் பன்ட் 39 ஓட்டங்களுடன் எம்புல்தெனியவின் பந்தில் போல்ட் ஆனார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் ரவிந்த்ர ஜடேஜா (4), ரவிச்சந்திரன் அஷ்வின் (13), அக்ஸார் பட்டேல் (9), மொஹம்மத் ஷமி (5) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
மறுபுறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் திக்வெல்லவினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
இலங்கை பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லசித் எம்புல்தெனிய 94 ஓட்டங்களுக்கு 3 விக்டெக்களையும் தனஞ்சய டி சில்வா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.