வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2100 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் இன்று அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் போராட்டப் பந்தலுக்கு முன்பாக நண்பகல் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எமக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம். அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து எமக்கு உதவி செய்து நேரடியாக வந்து இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம்” – என்று போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கக் கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்துகொண்டனர்.