தமிழ் திரையுலகத்தின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா கதையின் நாயகியாக, முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் இந்த புதிய படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், இளம் நட்சத்திர நடிகர் ஜெய், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை வை நாட் ஸ்டுடியோஸ், ஜீ ஸ்டுடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப நடிகர்கள் மற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நயன்தாரா ‘ராஜா ராணி’ எனும் படத்துக்கு பிறகு மீண்டும் சத்யராஜ் மற்றும் ஜெய்யுடன் இணைந்திருக்கிறார் என்பதும், திருமணத்துக்கு பிறகு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படம் இது என்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருக்கிறது.
அவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ எனும் ஹிந்தி படத்திலும், ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் ‘இறைவன்’ எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.