கொரோனா காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளனர்.இலங்கை அரசின் ஏற்பாட்டில் இன்று காலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற விசேட விமானத்தின் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
சிறிலங்கா எயார் லைன்ஸுக்குச் சொந்தமான யூ.எல்.1122 என்ற விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட 320 இலங்கையர்களும் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு விசேட விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் இன்று நண்பகல் 12.35 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலைய அதிகாரிகளால் அனைவருக்கும் உடல் வெப்ப நிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்பட்டது.