மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் முடிவுக்கு விட்டது.
இதையடுத்து நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்யப்படுவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் தமிழக அரசின் இந்த முடிவிற்கு கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான நடிகை ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது. “அந்தக் கொலைச் சம்பவத்தில் ராஜீவ்காந்தி மட்டுமே கொல்லப்படவில்லை. மற்ற பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க எப்படி விடுதலை செய்ய முடியும்..? என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ரம்யா, மிக இளம் வயதில் எம்.பி.யானவர் என்ற சாதனையைப் படைத்தவர். இவர், தமிழில ‘குத்து’ படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர். தொடர்ந்து ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘தூண்டில்’, ‘வாரணம் ஆயிரம்’, ’சிங்கம்புலி’ போன்ற படங்களில் நடித்தவர். இப்போது ‘காதல் டூ கல்யாணம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.