மோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர் முதலிடம் பிடித்துள்ளார்.
இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 17 சுற்றுகளாக, பல்வேறு நாடுகளில் நடைபெறும்.
அந்த வகையில் ஆண்டின் மூன்றாவது சுற்றான செக்குடியரசு கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒட்டோமோட்டோட்ரோம் ப்ர்னோ சர்வதேச ஒடுதளத்தில் நடைபெற்றது.
இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த பந்தயத்தில் 113.5 கிலோமீற்றர் பந்தயத் துரத்தை நோக்கி, 15 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.
இதில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர் பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 38.764 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, யமஹா அணியின் வீரரான பிராங்கோ மோர்பிடெல்லி, 5.266 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, டுகார்டி அணியின் வீரரான ஜோஹன் சார்கோ, 6.470 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மோட்டோ ஜிபி பந்தய தொடரில், இதுவரை மூன்று சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், யமஹா அணியின் வீரரான ஃபேபியோ குவார்டாரோ 59 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். யமஹா அணியின் மற்றொரு வீரரான மேவரிக் வினாலேஸ் 42 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். யமஹா அணியின் இன்னொரு வீரரான பிராங்கோ மோர்பிடெல்லி 31 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மோட்டோ ஜிபி பந்தய தொடரின் நான்காவது சுற்றான, ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி ரெட்புல் ரிங் ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.