கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றமடைந்திருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பிரேமலதா விஜயகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அதேபோன்று விஜயகாந்துக்கு தற்போது நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தொடா் சிகிச்சையின் பயனாக அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளது.
பிரேமலதாவுக்கு முதல் நிலை சிகிச்சை நிறைவடைந்த பிறகு விஜயகாந்தும் வீட்டுக்கு அனுப்பப்படுவாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.