மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.
இந்நிலையில், குறித்த அணைக்கட்டை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் இன்று (வியாழக்கிழமை) மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, உதவி அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.
குறித்த நீர்ப் பாதைக்கு குறுக்காகவுள்ள வீதி இன்னும் ஒரு அடி நீர் வரத்து அதிகமானால் போக்குவரத்து தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் போன்ற கிராம மக்கள் குறித்த வீதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில் குறித்த வீதியின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவப் பணியாளர்கள், கிராம அலுவலர்கள், முப்படையினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.