பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்-
“சாந்தன்”
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும்
“பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர்
ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும்.
இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle!
“உரு” படம் பார்த்த பலர், முக்கியமாக புலம்பெயர் தேசத்து நண்பர்கள் என்னிடம் சொன்ன ஒரு கருத்து என்னவென்றால், ‘இந்தப் படத்தை பாக்கேக்கை எங்களுக்கு ஊரிலை நிக்கிற உணர்வு இருந்திச்சு. அந்த வீடு, அந்த முற்றம், அந்த மாமரம், மாட்டுக் கொட்டில், கோயில், வயல்வெளி, காடு… எல்லாம் அப்பிடியே எங்கடை வீடு, எங்கடை முற்றம், எங்கடை மாட்டுக் கொட்டில்… மாதிரி இருந்திச்சு!’
உண்மையில் அந்த “ஊரிலை நிக்கிற” உணர்வுக்குக் காரணம் சாந்தனிடம் உள்ள தொழில் நுட்ப ஞான்மும் அதை முறையாகப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவுமே ஆகும்.
அத்துடன் ஒரு நல்ல படப்பிடிப்பாளருக்கு விடயங்களை வித்தியாசமான கோணங்களில் பார்க்கும் பண்பு இரத்தமும் சதையுமாக அவரது மூளையில் ஊறியிருக்க வேண்டும். அதுவும் சாந்தனிடம் நிறையவே உள்ளது.
ஒருமுறை சாந்தன் என்னிடம் சொன்னார், சின்னவயதில் காட்டுக்குள்ளை போய் பெரிய மரங்களிலை ஏறி பரண் கட்டி கீழே நடக்கிறதைப் பாக்கிறது தனக்கு ஒரு பொழுது போக்கு, அப்பிடி மேலேயிருந்து கீழே பாக்கேக்கை எல்லாம் வித்தியாசமா இருக்கும் என்று.
சிறுவயதில் இருந்தே சாந்தனிடம் விடயங்களைச் அசாதரணமான கோணங்களில் பார்ர்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை இது எனக்கு உணர்த்தியது.
அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் மிக மதிநுட்பமான முறையில் தனது பிசாசு-2 படத்துக்கான ஒளிப்பதிவாளரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றே சொல்வேன்.
“காசு தாங்கோ உங்கள் கதைகளைப் படமாக்கி உலக சினிமா விழாக்களுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்றபடி புலம்பெயர் தேசங்களுக்கு படையெடுக்கும் தமிழ்நாட்டு சினிமா இயக்குனர்கள் மத்தியில் புலம்பெயர் தேசத்து திறமைசாலிகளை அடையாளம் கண்டு, “வாய்ப்புத் தருகிறேன் பயன்படுத்திக் கொள்ளு. உங்கள் கதைகளை நீங்களே படமாக்க அது உதவும்” எனச் சொல்லாமல் சொல்லும் மிஷ்கினுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
எழுத்து_ ஞானதாஸ் காசிநாதர்.