ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன.
அவதார் 2 பட போஸ்டர்
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவதார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் வெளியேறினார்கள். 2 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜான் லேன்ட்ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதார் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து செல்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் உள்பட 50 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானத்தில் நியூசிலாந்து சென்றுள்ளனர். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் நியூசிலாந்து அரசின் விதிமுறைப்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்பட்டாலும் அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் 17-ந் தேதி திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்று ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.