3D மேப்பிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அருண் விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹொடடேலின் முகப்பு பகுதியில்‘ 3டி மேப்பிங்’ தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது.
தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்து கரவொலி எழுப்பினர்.
படம் குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,’ இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். 20 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது.
அதன் பிறகு கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தினோம். தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது.
எனக்கும் அவருக்கும் கலை மீது ஒரே விதமான பார்வை இருந்தாலும், அவருடைய பார்வையில் வணிகமும் இணைந்திருக்கும். ‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.
எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் ‘பார்டர்’ இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது. ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு நான்கு ஐந்து திரைக்கதைகளை எழுதி, பட தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்க திட்டமிட்டேன்.
ஆனால் பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு நடிகரை வைத்து இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான் சாத்தியமாகிறது. அது போன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.
‘குற்றம் 23’ படத்திற்கும், ‘பார்டர்’ படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார்.
‘பார்டர்’ படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தையம் அற்புதமான நடிப்பையும் பார்க்கலாம். இந்த ‘பார்டர்’ திரைப்படத்தை பட மாளிகையில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். பட மாளிகைக்கு வருகை தரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும்.’ என்றார்.
‘பார்டர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இடம்பெற்றதால் இந்த திரைப்படம் இந்தியா முழுமைக்குமான Pan- Indian Film ஆக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது