நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.