தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபு இந்து கடவுளான விநாயகர் பெருமான் வேடத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘யானை முகத்தான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
மலையாள இயக்குநர் ரிஜிஷ் மிதிலா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘யானை முகத்தான்’. இதில் யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசை அமைத்திருக்கிறார். ஃபேண்டஸி கொமடி ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை கிரேட் இந்தியன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லிஜோ ஜேம்ஸ், விமல் குமார், ரிஜிஷ் மிதிலா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எம்மில் அனைவருக்கும் கடவுள் எவ்வாறு தோன்றுகிறார் என்பது குறித்தும், வெவ்வேறான சூழ்நிலைகளில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது குறித்தும் பல்வேறு வகையினதான கருத்து உள்ளது. இதனை மையப்படுத்தி இந்த ‘யானை முகத்தான்’ படத்தின் கதை அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான ‘இன்னு முதல்’ எனும் படத்தின் கதையை முன்மாதிரியாக கொண்டு, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் யோகி பாபு, ரமேஷ் சிலக் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இதில் யோகி பாபு விநாயகர் பெருமான் வேடத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகிறது.” என்றார்.