Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா யார்க்கெடுத்து உரைப்பேன் | சிறுகதை | விமல் பரம்

யார்க்கெடுத்து உரைப்பேன் | சிறுகதை | விமல் பரம்

13 minutes read

“ஏதோ சாமான் வாங்கக் கடைக்குப் போறனெண்டாய். பிறகேன் தங்கச்சி இல்லாத நேரம் பாத்து அவளின்ர வீட்ட போனனி. அங்க மச்சானோட உனக்கென்ன கதை சொல்லுடி”

மாறனின் கோபக்குரல் கேட்டுத் திடுக்குற்றேன். எப்படித் தெரிந்தது. மாதவி சொல்லி இருப்பாளோ… திரும்பி வரும்போது வாசலில் நின்றாளே.

“சொல்லு. இப்ப போய் என்ன கெடுதல் செய்திட்டு வந்தனி”

“மாதவிக்காகத்தான் செல்வமண்ணையோட கதைக்கப் போனனான்” என்றேன்.

“என்னை நம்பச் சொல்லுறியோ. எல்லாம் உங்களால வந்ததுதானே. உன்ர அண்ணை ஏமாத்தாமல் இருந்திருந்தால் அவளுக்கு ஏன் இந்த சீரழிஞ்ச வாழ்க்கை”

“அவன் எங்களையும்தானே ஏமாத்தினான்.”

“கதைக்காத. எனக்கு வாற கோபத்துக்கு உன்னை..”

கை ஒங்கிக் கொண்டு அருகில் வர முறைத்தபடி விலகினேன்.

“என்னடி முறைக்கிறாய்” ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டு அறைக்குள் போனான். கண்ணீர் வழிய சுவரோடு சாய்ந்தமர்ந்து மடித்த கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.

திருமணமாகி நான்கு வருடங்கள். மாறனின் அன்றைய கோபம் இன்னும் தீரவில்லை. காரணம் அண்ணா. எல்லோரையும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டான். தன்னைப்போல தோட்டவேலை செய்து கஷ்டப்படக் கூடாதென்று பதினைந்து வயதில் அவனை யாழ்ப்பாணத்தில் தங்கிப் படிக்க வைத்தார் அப்பா. நானும் போய் படிக்க அடம் பிடித்தேன்.

“அவன் ஒருத்தனை விட்டுப் படிப்பிக்கிறதே கஷ்டமாய் இருக்கு. நீ இங்க படியம்மா”

“அண்ணாவை விடுறீங்கள் என்னையும் விடுங்கோ”

“நீயும் போனால் நான் தனிய என்னடா செய்யிறது நீ என்னோட இரு அமுதா”

அம்மா ஸ்தானத்திலிருந்தும் வளர்த்தவரின் சொல்லை என்னால் மீற முடியவில்லை.

ஸ்கந்தபுரத்து முருகன் கோயிலுக்கு எதிரே போகும் வீதியில் மூன்றாவது வீடு எங்களுடையது. கடைசியிலுள்ளது அப்பாவின் அக்கா கிளி மாமியின் வீடு. மாமிக்கும் மாறன், மாதவி இரண்டு பேர்தான். மாதவிக்கு என் வயது. இருவரும் மனமொத்த தோழிகளாய் இருந்தோம். அண்ணாவுக்கும் மாறனுக்கும் இரண்டு வயது வித்தியாசம். அண்ணாவைப் போல் மாறனுக்கு படிப்பில் ஆர்வமில்லை. ஏ.எல் ஒரு வருடம் படித்தான் பிறகு வயல் செய்கிறேன் என்று ஊர் சுற்றித் திரிந்தான். தங்கையிடம் பாசம் அதிகம். அவனின் முன் கோபமும் முரட்டுக் குணமும் பயத்தைத் தரும். அவனைக் கண்டாலே விலகிப் போய்விடுவேன். விடுமுறைக்கு அண்ணா வந்தால் மாதவியும் வந்து விடுவாள். வீடு கலகலப்பாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் படிக்கிறேன் என்ற பெருமையில் அவன் அலட்டிக் கொள்ளும் கதைகளை ஆர்வத்தோடு கேட்போம் சேர்ந்திருந்து விளையாடுவோம். வளர வளர படிப்பு பரீட்சை என்று அதிலேயே அதிக கவனம் செலுத்தினான். யூனிவர்சிற்றிக்குத் தெரிவாகியிருந்த காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து கொம்பியூட்டர், இங்கிலீஷ் படித்துக் கொண்டிருந்தான்.

மாமிக்கு அண்ணாவைப்போல மாறன் படிப்பதில்லையே என்ற கவலை. அண்ணாவைக் காணும் போது படிப்பைப் பற்றி அக்கறையாக விசாரிப்பாள். ஒருநாள் மாறனோடு வந்திருந்தாள்.

“நீ கெட்டிக்காரன். படிச்சு நல்ல நிலைமைக்கு வந்திடுவாய். எனக்கும் இருக்குதே படிப்பை விட்டிட்டு தறுதலையாய் சுத்துது. பிறகு கஷ்டப்படேக்கதான் தெரியும்”

“இப்ப என்னைப் பற்றி ஆராவது கேட்டவையே தேவையில்லாத கதை கதைக்கிறீங்கள்” கோபமாக வெளியே போனான் மாறன்.

“பிள்ளையளை ஒரு நாளும் ஒப்பிட்டுக் கதைக்காதை அக்கா. கண்டிச்சு படிக்க வைச்சிருக்க வேணும் அப்ப விட்டிட்டு இப்ப அவனைப் பேசுறாய்” என்றார் அப்பா.

“மாதவியை நினைக்கத்தான் எனக்கு கவலையாய் இருக்கு. நல்லவன் கையில பிடிச்சுக் குடுக்க வேணுமே” பெருமூச்சோடு சொன்ன மாமியின் பார்வை அண்ணா மீது பதிந்தது. அன்றே அண்ணா இல்லாத நேரத்தில் தன் விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தாள்.

பிறகு வந்த நாட்களில் மாதவியிலும் மாற்றம் கண்டேன். முன்புபோல் அண்ணாவுடன் நேரில் நின்று வார்த்தையாடுவதில்லை. அவனைக் காணும்போது அவள் முகத்தில் மின்னல் அடிப்பதையும் கதைத்தால் சந்தோஷத்தில் மிதப்பதையும் அவதானித்தேன்.

அண்ணா இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது அப்பா அடிக்கடி உடம்புக்கு முடியாமல் படுக்கையும் மருந்துமாய் இருந்தார். அந்த வருடத்தோடு படிப்பு முடிந்து விட்டது என்று நினைக்க தொடர்ந்து மேல்படிப்பு படிக்கப் போவதாகச் சொன்னான்.

“அப்பாவுக்கும் வர வர ஏலாமல் இருக்கு இனி கஷ்டமாயிருக்குமண்ணா”

“அதுக்காக நான் படிக்காமல் இருக்கிறதே” பிடிவாதமாய் நின்றான்.

“காணியை குத்தகைக்குக் குடுக்கிறன். போய் படியன் சமாளிப்பம்” என்ற அப்பா மாமியின் விருப்பத்தையும் சொன்னார். எதிர்பாராத திகைப்பு அண்ணா முகத்தில் தெரிந்தது.

“என்னப்பா நீங்கள். படிப்பு முடியேலை வேலை எடுக்கேலை இப்ப என்ன அவசரம்”

“உன்ர படிப்பு முடிஞ்சு ஒரு வேலையும் எடுத்த பிறகு இதைப் பற்றிக் கதைக்க இருந்தம். பல பேரோட சேர்ந்து படிக்கிற பிள்ளை இப்பவே சொல்லி அவன்ர விருப்பத்தைக் கேள் எண்டு அக்கா சொன்னா. எனக்கும் இதில சந்தோஷம். உனக்கு”

“நான் என்னப்பா சொல்லுறது. காசுக்கு ஒழுங்கு செய்யுங்கோ. முதல் படிச்சு ஒரு வேலை எடுக்கவேணும்” அவனின் சம்மதம் எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தந்தது.

அண்ணாவின் மேலதிகப் படிப்பால் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அப்பா திணறிப் போனார். உழைப்பு இல்லாமல் கடன் ஏறிக் கொண்டே போனது. அண்ணா தலை நிமிர்ந்து விட்டால் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் இருந்தோம். படிப்பு முடிந்து ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தில் வேலையும் கிடைத்தது. இரண்டு வருடங்களுக்குப் பின் திருமணத்தை வைக்கலாம் என்று அப்பா நினைத்திருக்க வேலை தொடங்கி இரண்டு கிழமைக்குப் பின் வீட்டுக்கு வந்தான். உடை நடையில் மாற்றம் தெரிந்தது. வந்தவன் மாதவியைப் போய்ப் பார்ப்பான் அவளைப் பற்றிக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன் கேட்கவில்லை. அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் வந்தவன் சிறிது நேரம் தயங்கி நின்றான்.

“எனக்கு மாதவி வேண்டாம் அப்பா நான்…”

“என்னடா சொல்லுறாய். அண்டைக்கு கேக்க தலையாட்டினாயே. அக்காவுக்கு வாக்கு குடுத்திட்டன். மாதவிதான் இந்த வீட்டுக்கு வரவேணும்” கடுமையாகச் சொன்னார் அப்பா.

“நான் செய்யமாட்டன். இது என்ர வாழ்க்கை. நான் விரும்பினவளைத்தான் செய்வன்”

“விரும்பினவள் எண்டால்…”

“யூனிவர்சிற்றியில என்னோட படிச்சவள் நாலு வருசப் பழக்கம். அவளை எனக்குப் பிடிச்சிருக்கு. அவளைத்தான் செய்வன்” நம்ப முடியாமல் திகைத்துப் போனார் அப்பா.

“அப்பா கேட்டபோது ஏன் பேசாமல் இருந்தாய். படிச்சு வேலை எடுத்தாப் பிறகு சொல்லுறாய். இனி அப்பா என்ன சொன்னாலும் உனக்குப் பிரச்சனையில்லை. எங்களை, மாதவியை நம்ப வைச்சுக் கழுத்தை அறுத்திட்டாய்” கத்தினேன்.

“நீங்கள் சம்மதிச்சாலும் இல்லாவிட்டாலும் இதுதான் என்ர முடிவு” கறாராய் சொல்லி விட்டுப் போனவனை வெறித்துப் பார்த்தார் அப்பா. வீட்டில் மயான அமைதி நிலவியது.

விஷயம் அறிந்து தலைதலையாய் அடித்து அழும் மாமியை சமாதானப்படுத்த முடியவில்லை. எதிர்பார்ப்பு ஏமாற்றம் கோபம் என்று மனதிலுள்ளதைக் கொட்டித் தீர்த்தாள்.

“பெடியன் கொதிக்கப்போறான். அவளுக்கு எப்பிடிச் சொல்லுவன். நல்லவன் எண்டு உன்ர பிள்ளையைத் தூக்கித் தலையில வைச்சன். அவன் என்ர பிள்ளையை நல்லவனாக்கிப் போட்டு போயிற்றான். நல்லாயிருக்கட்டும்”

அழுது கொண்டே போகும் மாமியைப் பார்த்து நிலைகுலைந்து போனார் அப்பா. அதன் பிறகு மாமி வீட்டுக்கு வரவில்லை. மாதவியும் தலையைத் திருப்பிக் கொண்டு போனாள். அண்ணாவும் வரவில்லை. சொந்தம் எல்லாம் அறுபட்டுப் போச்சே என்று துடித்துப் போனார் அப்பா.

எங்களுக்குச் சொல்லாமலே ஆறு மாதத்தில் மாதவியின் திருமணம் நடந்தது. பார்க்க முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும் அவளொரு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டது நிம்மதியைத் தந்தது. அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. வந்தவன் சரியில்லை சந்தேகத்தில் அடிப்பதாகச் சொன்னார்கள். மாதவியைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் நெஞ்சைப் பதற வைத்தது.

ஒருநாள் கடைக்குப் போகும் வழியில் மாமி அப்பாவைப் பார்த்தபோது கதறி அழுதாள்.

“அவள் உங்களுக்கு என்னடா பாவம் செய்தாள். உன்ர பிள்ளையால வந்தவன் சந்தேகப்பட்டு அவளைப் போட்டு அடிக்கிறான்”

மாமி சொன்னதைத் தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்தபடி படுக்கையில் விழுந்தார் அப்பா. மாதவியைப் பார்க்க மனம் துடித்தாலும் தைரியம் வரவில்லை. துன்பங்கள் அடிமனதில் ஆறாத ரணங்களாய் பதிந்திருக்க வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

இரண்டு வருடங்களாகிவிட்டது. அன்று என் தலையெழுத்து மாறப் போவதை அறியாமல் வாசல் கதவைத் திறந்து வரும் மாமியைப் பார்த்து நானும் அப்பாவும் சந்தோஷப்பட்டோம்.

“வா அக்கா. அவன் செய்த பாவத்துக்கு எங்களைத் தண்டிச்சிட்டியே. எங்களைப் பாப்பான் எண்டு நாங்களும்தான் நம்பியிருந்தம் போனவன் வரவேயில்லை”

அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“பிள்ளைக்கு இப்பிடியாச்சே எண்ட கவலை. நிம்மதியாய் நித்திரை கொண்டு எத்தின நாளாச்சு. பெடியன்ர வாழ்க்கையாவது நல்லாயிருக்க வேணும் எண்டு அமுதாவைக் கேக்க வந்தனான் ஏமாத்திப் போடாதை” திகைத்துப் போனேன். மாறனின் முகம் மனதில் நிழலாட நடுக்கத்தோடு அப்பாவைப் பார்த்தேன்.

“என்னக்கா திடீரெண்டு வந்து கேக்கிறாய்” அப்பாவும் தயங்குவது தெரிந்தது.

“உன்ர வீட்டில செய்ய ஆசைப்பட்டன். விருப்பமில்லையோ சொல்லு ஓரேயடியாய் போறன்”

மாமி சொன்னதைக் கேட்டு அப்பாவால் மறுக்கவும் முடியவில்லை ஏற்கவும் முடியவில்லை. கலங்கிப் போயிருந்த என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

“நீ என்னம்மா சொல்லுறாய். உனக்கு…”

“உங்கட விருப்பமப்பா” அண்ணாவால் நொந்துபோனவருக்கு என் பதில்தான் ஆறுதல்.

மாமி தாமதிக்கவில்லை மூன்று மாதத்தில் எங்கள் திருமணம் நடந்தது. மாறனின் இறுக்கமான முகத்தைப் பார்க்கும்போது மனதில் பயம் தோன்றியது. ஒரு கிழமையாகி விட்டது. அன்று காலையிலேயே அப்பா தோட்டத்திற்குப் போய்விட்டார். போன் அடிக்கும் சத்தம் கேட்டு படுத்திருந்த மாறன் எழுந்து வந்து எடுத்தான். முகம் பயங்கரமாய் மாறியது.

“மச்சானிட்ட இண்டைக்கும் அடி வாங்கி அழுகிறாள் அவளின்ர வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டு நீங்கள் எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறீங்கள்” கத்தினான்.

“வீட்டில இரண்டு பேருக்கும் செய்வம் எண்டு கதைச்சதே தவிர இரண்டு பேரும் சேர்ந்து வெளியில சுத்தினவையே. இதில சந்தேகப்பட என்ன இருக்கு”

“அவன் செய்தது சரியெண்டு சொல்லுறியோ. என்ன திமிரடி உனக்கு எதிர்த்து கதைக்கிறாய்”

அருகில் வந்தவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். எதிர்பாராத அடியில் திகைத்துப் போனேன். மாறனின் கோப முகத்தை முன்பு பார்த்திருந்தாலும் சிவந்த விழிகளோடு இவ்வளவு அருகில் பார்த்ததும் பயத்தில் மயக்கம் வந்தது. தலையைப் பிடித்தபடி அப்படியே நிலத்தில் உட்கார்ந்தேன். இந்த வாழ்க்கையையா வாழப் போகிறேன். கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

“அழு நல்லா அழு. இரண்டு வருசமாய் அவளும் அழுது கொண்டுதானே இருக்கிறாள்” கத்தியபடி வெளியே போனான். அப்பாவை நினைத்ததும் கண்களைத் துடைத்தபடி எழுந்தேன். தெரிந்தால் தாங்கமாட்டார். பயமும் பரிதவிப்புமாய் நாட்கள் நகர்ந்தன.

மாதவி பழையபடி தன் கஷ்டங்களையும் கவலைகளையும் என்னோடு பகிர்ந்து ஆறுதல் தேடியவள் திடீரென ஒதுங்கிப் போனாள். காரணம் அறிந்தபோது திகைத்துப் போனேன். பழைய உறவைப் புதுப்பிக்க என்னோடு கதைக்கிறாள் என்று அடி வாங்கினாளாம்.

“எல்லாம் உன்னாலதான்டி. அவளோட உனக்கென்ன கதை” மாறன் சொல்லி அடித்தான். ஒவ்வொரு முறையும் மாதவி அடி வாங்கித் துன்பப்படும் போதெல்லாம் அதன் எதிரொலி இங்கேயும் விழுந்தது.

இந்த நேரத்தில்தான் கோவிட் தொற்று எங்கும் பரவி சனங்களை பீதி கொள்ள வைத்தது. தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தோம். ஊரடங்கு போட்டார்கள். எங்கும் போக முடியவில்லை. வீட்டில் இருந்ததால் மாறனின் பழி வாங்கும் குணம் அப்பாவிற்குத் தெரிந்தது. அண்ணாவோடு ஒரு தொடர்பும் இல்லையென்று தெரிந்தும் அவனின் துரோகத்தைக் குத்திக் காட்டி எல்லோரையும் நோக வைத்தான். அப்பாவால் தாங்க முடியவில்லை.

“நம்பித்தானே உங்களுக்கு கட்டி வைச்சன். நிம்மதியாய் வைச்சிருக்கக் கூடாதா”

கேட்டதும் கோபம் முழுவதும் என்னிடம் திரும்பியது.

“அம்மா சொல்லியும் கேக்கேல மாமாவுக்கு பயந்திடுவனா. அவன் செய்யிறன் எண்டு சொல்லி ஏமாத்தினது ஊருக்கெல்லாம் தெரிஞ்சதாலதானே அவளுக்கு இந்த நிலமை. என்ர தங்கைச்சியை அழ வைச்சவனின்ர தங்கைச்சியடி நீ. அவள் அழுதால் நீயும் அழ வேண்டாமா.. படிச்ச திமிரிலதானே அவன் விட்டிட்டுப் போனான். நான் படிக்கேல எண்டுதானே நீ முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாய். உன்னை ஆசைப்பட்டுச் செய்தன் எண்டு நினைச்சியோ..” அப்பாவுக்கு எதிரிலேயே வாயில் வந்தபடி பேசினான். அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார் அப்பா. வலியோடு படுத்தவர் மூன்று நாளாய் எழுந்திருக்கவில்லை. மருந்து எடுத்தும் உடம்பு தேறவில்லை.

“இப்பிடியொரு வாழ்க்கையைத் தேடித் தந்திட்டனே எப்பிடியெல்லாம் கஷ்டப்படப் போறியோ. உன்னையும் படிக்க வைச்சிருக்க வேணும். தைரியமாய் உன்ர காலில நிண்டிருப்பாய். அவன்ர குணம் தெரிஞ்சும் தப்பு பண்ணிட்டனேம்மா” அழுதார்.

“இப்பிடியே வாழ்க்கை போகாதப்பா. நீங்க தைரியமாய் இருங்கோ”

ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போனேன். கோவிட் பயத்தால் அப்பாவை மட்டும் சேர்த்தார்கள். ஆறாம் நாள் கோவிட் என்றார்கள். பார்க்கவும் அனுமதிக்கவில்லை. எங்களுக்கும் வீட்டில் சிறைவாசம். மூன்று கிழமைக்குள் எல்லாம் முடிந்து விட்டது. முகம் பார்த்து அழ முடியவில்லை. பிள்ளைகள் இருந்தும் நிம்மதியில்லாமல் அநாதையாய் போனவரை நினைத்து அழுது தீர்த்தேன்.

நெஞ்சு அதிர்வில் நடுங்கியது. நினைவுக்குத் திரும்பினேன். போனின் மணிச்சத்தம் இடைவிடாது அடித்துக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு வந்து போனை எடுத்த மாறன்

“திரும்பவும் ஏதாவது பிரச்சனையா… என்னடி சொல்லுறாய்”

கேட்டபடி என்பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே போனான்.

என் பிரச்சனை தீர வேண்டுமானால் மாதவியின் சந்தோஷம் முக்கியம். மாறனுக்கு இவ்வளவு மூர்க்கத்தனம் வருவதற்கு காரணம் அவளின் துன்பம். ஏதாவது செய்ய வேண்டும். போக்குவரத்து இல்லையென்றாலும் அங்கு போவதற்கு முடிவெடுத்தேன்.

வீட்டு முற்றத்தில் மோட்டார்சைக்கிள் கழுவிக் கொண்டிருந்த செல்வமண்ணையின் முகம் என்னைக் கண்டதும் மாறியது.

“மாதவி இல்லை கடைக்குப் போயிட்டாள்” என்றார்.

“நான் உங்களைப் பாக்கத்தான் வந்தனான். அண்ணா இங்க வந்தானா”

“அவன் ஏன் இங்க வரப் போறான்”

“நீங்கள் அவன்ர வீட்டுக்குப் போய் அவனைப் பாத்தீங்களா”

“என்ன… நான் ஏன் அவனிட்ட போறன்”

“அவன் வாறதுமில்லை நீங்கள் போறதுமில்லை. எல்லாரையும் மறந்து அவன் எங்கேயோ சந்தோஷமாய் இருக்கிறான். அவனைச் சொல்லி எங்களை ஏன் கொல்லுறீங்கள்”

திகைத்து நின்றார்.

“நான் இந்த ஊர்க்காரன். எந்த நேரமும் மாதவி உங்கட வீட்டிலதானே இருக்கிறவள். இரண்டு பேரும் விரும்பாமலே கலியாணம் பேசினவை”

“சொந்தம், பேசின கலியாணம் எண்டு எல்லாம் தெரிஞ்சுதானே நீங்கள் அவளை விரும்பிச் செய்தீங்கள். பிறகேன் கோவம் வாற நேரமெல்லாம் பழைய கதையளைச் சொல்லி அவளை அடிச்சுக் கஷ்டப்படுத்திறீங்கள். அவளை அழ வைச்சிட்டு நீங்கள் நிம்மதியாய் இருக்கிறீங்களா சொல்லுங்கோ. உங்கள நம்பி வந்தவளையும் சந்தோஷமாய் வைச்சிராமல் நீங்களும் நிம்மதியில்லாமல் என்ன வாழ்க்கை அண்ணை இது. எங்களாலதான் தன்ர தங்கச்சி கஷ்டப்படுறாள் எண்டு மாறன் என்னைக் கஷ்டப் படுத்துறான். அவன்ர கோவம் நியாயமானது எண்டு நினைச்சாலும் எவ்வளவு நாளைக்கு நானும் தாங்கிறது. வீணாய் சந்தேகப்பட்டு சந்தோஷங்களை ஏன் அழிக்கிறீங்கள்”

நிறுத்தி விட்டு முகத்தைப் பார்த்தேன். வேறு பக்கம் பார்த்தபடி பேசாமல் நின்றார்.

“இந்த வாழ்க்கையை வாழ வேணுமா எண்டு மனம் வெறுத்துப் போகுது. சாகிறதுக்கும் பிரிஞ்சு போறதுக்கும் ஒரு நிமிசம் போதும். நாங்கள் பொறுமையாய் இருக்கிறது நீங்கள் எங்கட அருமையைப் புரிஞ்சு கொள்ளுவீங்கள் எண்டுதான். வாழுற வாழ்க்கையை நிம்மதியாய் வாழவேண்டாமா. எங்களைத் திருத்திக் கொண்டு சந்தோஷமாய் வாழலாமே”

குரலடைக்கச் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பாராமல் திரும்பினேன். வாசலில் மாதவி நின்றாள். கதைத்ததைக் கேட்டிருப்பாளோ. அவளோடு கதைக்கும் மனநிலை இல்லை. வந்து விட்டேன்.

தலைப்பாரம் தாங்க முடியவில்லை. தாகத்தில் நா வரண்டு இருந்தது. மெல்ல எழுந்துபோய் பானையிலுள்ள தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டுத் திரும்பினேன். என்னையே பார்த்தபடி அறை வாசலில் நின்ற மாறனை கவனியாது பழைய இடத்திற்கு வந்து சுவரோடு சுருண்டு கண்களை மூடிக் கொண்டேன். அருகில் கால் அரவம் கேட்டது. வாசல் கதவு திறந்து மூடும் சத்தமும் கேட்டது. அவனுக்கென்ன வலியா.. வேதனையா..

சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது. பார்த்தேன் சாப்பாட்டுப் பார்சலோடு வந்தவன் ஒன்றை எடுத்து எனக்கருகில் வைத்து விட்டு சமையலறைக்குப் போனான். பசியிருந்தாலும் சாப்பிட மனம் வரவில்லை. தான் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தவன் அப்படியே பார்சல் இருப்பதைப் பார்த்து விட்டு எடுத்துக் கொண்டு போனான். தட்டில் போட்டு தண்ணீரோடு கொண்டு வந்து வைத்தான். ஆச்சரியத்தில் என் விழிகள் விரிந்தன.

“சாப்பிட்டிட்டு உள்ள வந்து படு அமுதா”

என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாலு வருசத்தில் இந்த குரலை இன்றுதான் கேட்கிறேன்.

இது அந்த வீட்டின் எதிரொலியா…!

.

நிறைவு...

.

.

விமல் பரம்

.

நன்றி – சிறுகதை மஞ்சரி சஞ்சிகை. பங்குனி 2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More