கல்பிளந்திடும் கரங்கள் தொடக்கம்
கணனி தோய்ந்திடும் விரல்கள் வரைக்கும்
சொல் சுரந்திடும் உளங்கள் தொடக்கம்
சுரம் வழங்கிடும் குரல்கள் வரைக்கும்
‘தில்’ நிறைந்தவர் திறன்கள் தொடக்கம்
திண்மை கொண்டவர் தியானம் வரைக்கும்
நல் வளங்களும் பரந்து நிறைக்க
நாட்டு மக்களின் வாழ்வு சிறக்க
வல்ல சக்தியின் தாள்கள் வணங்கி
வாழ்த்தி நின்றனம் ‘மே’ த் திருநாளிலே!
பிறர் உழைப்பினைப் பிடுங்கிப் பிழைத்திடும்
அறமில் உலகு அடியோடழியவும்
திறன் உணர்ந்தவர் தகைய தலைமையிற்
தேச அரசுகள் துறைகள் துலங்கவும்
உறவில் உண்மையும் உழைப்பின் மேன்மையும்
உரிமைத் தன்மையும் உயிர்த்து ஓங்கவும்
இறைமை கொண்ட இனங்கள் தங்களின்
இனிய வரலாற்றுப் பெருமை கொள்ளவும்
இதயம் உந்திட இன் நன்னாளிலே
எமது தமிழவை வாழ்த்து நல்கிற்றே!
புலவர் சிவநாதன்