பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஈழத்தின் முதன்மைக் கவிஞர் மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்களின் 50ஆவது ஆண்டு நினைவாக “மஹாகவி நினைவு 50 – சிறப்புரையும் நூல்கள் அறிமுகமும் ” என்ற முக்கியமான வரலாற்று நிகழ்வை நடாத்துகிறது. குறித்த நிகழ்வு எதிர்வரும் 15.11.2022 செவ்வாய், 3.00 மணிக்கு, பேராதனைப் பல்கலைக்கழக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார். முக்கியமான நிகழ்வாக மஹாகவியின் படைப்புகளைப் பதிப்பித்து வெளியிட்ட, மஹாகவியைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கவனப்படுத்திய கவிஞரும் விமர்சகரும் புகழ்பெற்ற அறிஞருமாகிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களின் சிறப்புரை இடம்பெற உள்ளது. பேராதனைத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் அறிஞருமான நுஃமான் தமது சிறப்புரையை “மஹாகவி: காலமும் கவிதையும்” என்ற பொருளில் நிழ்த்தவுள்ளார்.
நிகழ்வில் மஹாகவியின் மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பெற்று அறிமுக உரைகளும் இடம்பெற உள்ளன.
“மஹாகவி கவிதைகள்” என்ற நூலின் அறிமுக உரையைத் தமிழ்த்துறை விரிவுரையாளர்
திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் நிகழ்த்துகிறார்.
“மஹாகவி நாடகங்கள்” என்ற நூலின் அறிமுக உரையைத் தமிழ்த்துறையின் உதவி விரிவுரையாளர் திரு. வி.விமலாதித்தன் நிகழ்த்துகிறார்.
“மஹாகவி காவியங்கள்” என்ற நூலின் அறிமுக உரையைக் கவிஞரும் விமர்சகரும் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான
கலாநிதி செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்துகிறார்.
நிகழ்வில் மஹாகவி படைப்புகளின் புதிய பதிப்புக்களை வாசகர்கள் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுக்குத் தமிழ்த்துறையினர் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.