Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இரும்புச் சிலுவை | ந. பிரதீப்

இரும்புச் சிலுவை | ந. பிரதீப்

1 minutes read

மாயா…
உன்காதலை சுமக்கும் போது
நான் சுடுகலனை சுமந்ததில்லை,
சுடுகலைனை சுமக்கும் போதெல்லாம்
நம் கதலை இறக்கியே வைத்திருந்தேன்..

போரை
வாரி உடுத்திக்கொண்ட தேசத்தில்
வரி உடுத்திக்கொண்டவர்கள் நாம்…
மாரி மழையடித்த நாளொன்றில்
ஊறி நனைந்த ஊதாநிறச்சட்டையொன்றில்
உன்னைக்கண்டேன்…
கரிப்பட்டமுறிப்பில்
காயப்பட்ட எனக்கு
தையலிட்ட தையல் நீதான் நினைவிருக்கிறதா…??

எதுவுமே
பேசிக்கொள்ளாத என்னிடம்
இறுதியில் நீ சொன்னது
” கொஞ்சமென்டால்
குண்டு நெஞ்சால பறிஞ்சிருக்கும்,
காப்பு மறைப்போட கவனமா
சண்டை புடியுங்கோ”…

கண்களை பார்த்துக்கொண்டே
கடைசியாக நான் சொன்னது
” நீங்களே மருந்து கட்டுவியலென்டால்
நிறையத்தடவை காயப்படலாம் “
கோபமாய் சிரித்தாய்,
குழிவிழத்தவறவில்லை கன்னம்..
வேகமாய் வெளிக்கிட்டேன்,
அடுத்தநாள் ஆழியவளைச் சண்டைக்கு..

மாயா
உன்னைப் பிரியாதென்றிருந்த என்னுயிர்
புன்னைநீராவியடியில்
கிணற்றுக்கட்டொன்றில்
சாய்ந்தபடி பிரிகிறது…
காயப்பட்ட இடத்தின்மேலே
உன்கடிதமொன்றை அழுத்திக்கொண்டேன்…
நாங்கள் சுமப்பது சுடுகலனல்ல
இரும்புச் சிலுவை
அதுதான் எங்களை இரட்சிக்கும்…

ந.பிரதீப்
1:37 am
திங்கள்
12- 12- 22

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More