ஒவ்வொரு நாளும்
வகுப்பறைக்குள் நுழையும் போதெல்லாம்
கண்கள் தேடுகின்றன
எனது பிரதியை
இறுதியும் முதலுமற்ற
ஆசனத்தில் பௌவியமாய்
வால் மடக்கி உட்கார்ந்திருந்த
எனது பிரதிகள்
இப்போதெல்லாம்
கூர்படைந்திருந்தனர்
சட்டைக் காலர்களை மடக்கி
வாரி இழுக்காத தலைகளுடன்
ஒற்றை கொப்பியுடன்
ஒய்யாரமாய் பள்ளிக்கு வரும் அவர்கள்
பிரம்பின் சொடுக்குகளுக்கு
பயந்து சொற்கள் உதிர்க்கும்
எனது தலைமுறையின்
பிரதிகளாய் இப்போதில்லை..
ஒவ்வொரு காலையிலும்
கோபமாய் நீளும்
அறச்சொற்பொழிவுக்கு பிறகு
கொஞ்சம் அமைதியாய் இருக்கும்
அந்த வகுப்பறையில்
மீண்டும் மீண்டும்
நினைவில் அசைகின்றன
என் வாத்தியார்களின் கோபக்குரல்கள்
குறிஞ்சியூர் வில்வரசன்