Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பெருங்காயத்தின் மருத்துவ வரலாறு அறிந்திருங்கள்.

பெருங்காயத்தின் மருத்துவ வரலாறு அறிந்திருங்கள்.

5 minutes read

இன்று போலவே, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், நமது தேசத்திற்கு வந்த, சில வெளிநாட்டுப் பொருட்கள் அதிக அளவில், மக்களின் பயன்பாட்டில் இருந்தன, அவற்றுள் முக்கியமான ஒன்றுதான், அசபோடிடா எனும் பெருங்காயம்.

பெருங்காயம். இந்த ஒரு பொருள் இல்லையென்றால், சமையலில் ஒரு சிறந்த சுவையை, மணத்தை நாம் உணர்ந்திருக்க, வாய்ப்பிருந்திருக்காது, சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும், ஒரு அரிய சமையல் மணமூட்டிதான், அசபோடிடா என்று ஆங்கிலத்தில், அழைக்கப்படும், பெருங்காயம்.

கார நெடியுடன் கூடிய கார்ப்பு சுவையுடன் இருக்கும் பெருங்காயம், வீடுகளில் வைக்கும் வெங்காய சாம்பார் மற்றும் இரசம் போன்ற சைவ உணவுகளின் சுவையை, பல மடங்கு உயர்த்தக் கூடியது.

சைவ உணவுமுறைகள்:

சைவ உணவுப் பழக்கத்தைப் பாரம்பரியமாக கடைபிடித்து வாழும், மக்களில் சிலர் மற்றும் பெரியவர்கள் எல்லாம், உணவில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் உணவில் சேர்ப்பது, பெருங்காயம் ஆகும். உணவுகளில் சுவை மட்டுமல்ல, உணவை செரிமானமாக்குவதில் உறுதுணை புரிந்து, உடலில் தோன்றும் நச்சு வாயுக்களை வெளியேற்ற வல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எப்படி கிடைக்கிறது பெருங்காயம்?
பெர்சியா எனப்படும் ஈரானில் இருந்து, குங்குமப்பூ மட்டும் கிடைக்கவில்லை, பெருங்காயமும் அங்கிருந்துதான், நமக்கு கிடைக்கிறது. அபியாசேயே எனும் செடியே, பெருங்காயம் கிடைக்கக் காரணமாகிறது. கிளைகளில் படர்ந்த சிறிய இலைகளைக் கொண்டு, ஐந்தடி உயரத்திற்கு வளரும் செடிகளின், பூக்களும் பசுமை வண்ணத்திலேயே காணப்படும்.

இவற்றின் பழங்களும், வேர்த்தண்டுகளும், பசை போன்ற பாலைக் கொண்டிருக்கும். செடிகளின் தண்டுப்பகுதி, பிசின் போன்ற பசையுடன் காணப்படும். இந்தப் பசைகளின் காரணமாக, இந்தச் செடிகள் இருக்குமிடம், சற்றே பூண்டு போன்ற வாசனையுடன் காணப்படுகின்றன.

இவை, துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன, நமது தேசத்தில், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் அதிகம் விளைகிறது.

பெருங்காயம் தயாரிக்கும் முறை :
இரண்டு மூன்று ஆண்டுகள் வளர்ந்த இந்தச் செடிகள், பூக்கும் பருவத்திற்கு முன், இந்தச் செடியில் உள்ள, சற்றே சதைப் பற்றுள்ள வேரை வெட்டி, செடியை நீக்கிவிட்டு, வேரின் மேல்பாகத்தை, மண் மற்றும் இலை தளைகள் கொண்டு, மூடி விடுவார்கள். சில நாட்கள் கழித்து, அதை நீக்கிப் பார்க்கும் போது, வேரின் மேல் பகுதியில் வடிந்துள்ள, பால் போன்ற திரவத்தை சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.

அதன் பின் வேரை சிறிது வெட்டி, மீண்டும் மீண்டும் சில நாட்களில், பிசின் போன்ற பசையை சேகரிப்பார்கள். இப்படி, வேர் முழுதும் தீரும் வரை பிசினை சேகரித்து, வருவார்கள். இதே போல, தண்டுப் பகுதியில் வடியும் பாலையும், தண்டுகளைப் பிழிவதன் மூலம், சேகரிப்பார்கள், பின்னர், இவற்றைப் பக்குவப்படுத்தி, வெயிலில் நன்கு காய வைக்க, அவை சற்றே, கெட்டியாக இறுகும், இதுவே, நாம் உணவில் சேர்க்கும் பெருங்காயமாகும்.

இந்தப் பெருங்காயம் கடைகளுக்கு வரும்போது, அதில் பெருங்காயத்தின் அளவு குறைந்து, அத்துடன் பிசின்கள் மற்றும் அரிசிமாவு போன்றவை சேர்ந்து, அதில் 33 சதவீதம் மட்டுமே, பெருங்காயம் இருக்கிறது. அதனால், கூட்டுப் பெருங்காயம் என்று சொல்லுகின்றனர். இதில் இருவகை உண்டு, பால் பெருங்காயம் மற்றும் கறுப்புப் பெருங்காயம் என்பார்கள். இதில், பால் பெருங்காயமே, சிறந்தது.

அந்தப் பெருங்காயமே, மிக்க வாசனையுடனும், காரத்துடனும் இருப்பதை நாம் கண்டிருப்போம். இதில் உள்ள ஒலியோ ரெசின் எனும் வேதிப்பொருள் உடலுக்கு நன்மைகள் செய்யக்கூடியது.

வாயுவை அகற்றக் கூடியது :
பெருங்காயம் பொதுவாக, உணவில் சேரும்போது தானும் செரிமானமாகி, உணவையும் செரிமானமாக்கும் ஆற்றல் படைத்தது, என்று பெரியோர்கள் கூறுவார்கள். உடலில் உள்ள வாயுவை அகற்றி, செரிமானத்தை ஏற்படுத்தக் கூடியது.

நச்சுக்களை அழிக்கும் :
உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மகப்பேறான தாய்மார்களுக்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்கும். இருப்பினும், அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் எனும் சூடு ஏற்படும்.

பெருங்காயத்தின் மருத்துவ பயன்கள்.
தினமும் பெருங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால், வாயுத்தொல்லை, வயிறு உப்புவது, செரிமானமின்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் விலகி, நல்ல பசியெடுக்கும். வாய் துர்நாற்றத்தையும் போக்க வல்லது, பெருங்காயம்.

பிரசவித்த தாய்மார்களுக்கு :
பிரசவம் ஆன சில தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு பின்னரும், உதிரப்போக்கு காணப்படும். அவர்களுக்கு, வாணலியில் பெருங்காயத்தை வறுத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி, இஞ்சிச்சாறு மற்றும் பூண்டு சேர்த்து, சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால், அவர்களின் பாதிப்புகள் நீங்கிவிடும். இந்த மருந்தே, மற்ற பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தி, மாதாந்திர சுழற்சியை சரியாக்கிவிடும் தன்மை படைத்தது.

ஆஸ்துமா சுவாசக் கோளாறை சரிசெய்ய :
மூச்சுவிட முடியாத கடுமையான ஆஸ்துமா பாதிப்புக்கு, சாம்பிராணி போடுவது போல, தீபக்காலில், நெருப்பு மூட்டி, அதில் பெருங்காயத் தூளை இட்டு, அந்த புகையை சுவாசித்து வர, மூச்சுத் திணறல் பாதிப்புகள் விலகி, சுவாசம் உடனே சீராகும்.

வயிற்று வலி செரிமானமின்மை போக்க
நெய்யில் பொறித்துத் தூளாக்கிய பெருங்காயத்தை சிறிது எடுத்து, பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, உடலில் சேர்ந்த வாயு வெளியேறி, வயிறு உப்புவது சரியாகும். செரிமானமின்மை நீங்கி, நன்கு பசியெடுக்கும். மற்றும் வயிற்றில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அழிந்து வெளியேறி, வயிற்று வலி சரியாகும். வயிறு தொடர்பான பாதிப்புகள் விலக, வறுத்த பெருங்காயத் தூளை, மோரில் இட்டு பருகி வர, வாயு விலகி, வயிறு நலமாகும்.

சளி கரைய :
பெருங்காயத்தை சற்று நீரில் குழைத்து, வயிற்றில் தொப்புளைச் சுற்றித் தடவி வர, வயிற்றுப் பொருமல் பாதிப்பு நீங்கும். இதே போல, குழந்தைகளின் நெஞ்சில் தடவி வர, கக்குவான் எனும் குழந்தைகளின் சளி பாதிப்பு விலகும்.

பல்வலியைப் போக்க
பெருங்காயத்தை வாணலியில் வறுத்து தூளாக்கி, பூச்சி உள்ள சொத்தைப் பற்களில் வைத்து, அழுத்திக்கொள்ள, பல் வலி உடனே விலகி விடும்.

நரம்புத் தளர்ச்சி விலக
நெய்யில் வறுத்த பெருங்காயத் தூளுடன் உலர்ந்த துளசி இலைகள் அல்லது சிறிது துளசிப் பொடியை சேர்த்து, ஒரு தம்ளர் சுடுநீரில் கலந்து பருகி வர, வயிற்று பாதிப்புகள், உடனே விலகி விடும்.

மேலும், நரம்புத் தளர்ச்சி, மூளையின் செயல்பாடு பாதிப்பால் ஏற்படும், வலிப்பு போன்ற வியாதிகளை சரி செய்வதில், மிக்கப் பயன்கள் அளிக்க வல்லது.

:
அசைவத்துற்கு நிகரான சத்து :
ஒலியோ ரெசின், பெருலிக் அமிலம், அம்பெல்லி பெரோன் மற்றும் பல வேதிப் பொருட்களை உள்ளடக்கிய, பெருங்காயம், பல வகைகளில் மனிதர்களின் உடல் நலனைக் காக்கிறது.

இதில் அதிக அளவில் காணப்படும் புரதச் சத்துக்கள், சைவ உணவு உண்பவர்களுக்கு, வரப்பிரசாதமாகும். பெருங்காயத்தை, தினமும் உணவில் சேர்த்து வர, அசைவ உணவில் உள்ள புரதத்துக்கு, நிகரான சத்துக்களைப் பெறலாம்.

உலகை அச்சுறுத்தும் நச்சு வைரஸ் கிருமிகள் பரப்பும் சுவைன் ப்ளூ வியாதியை குணமாக்குவதில், பெருங்காயத்தின் வேர்கள் பயன்படுவதாக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இத்தனை சிறப்பு மிக்க பெருங்காயத்தில், தற்போது கலப்படம் அதிகமாக இருப்பது, எல்லோரையும் வருந்தச் செய்யும் ஒன்றாகும்.

சுத்தமான பெருங்காயத்தை அறிவது எப்படி?
பெருங்காயத்தை சிறிது எடுத்து நீரில் இட, அது நீரில் கரைந்து, தண்ணீரை வெண்மை வண்ணமாக்கி விட்டால், அது சுத்தமான பெருங்காயம் என்று அறியலாம்.

மாறாக பெருங்காயம் நீரில் கரையாமல், பிசின் போலக் காணப் பட்டால், அது கலப்படமாகும். இன்னொரு முறையிலும், நாம் சோதித்து அறியலாம், பெருங்காயத்தை சிறிது எடுத்து, அதைத் தீயில் காட்ட, சூடம் போல, முழுதும் எரிந்தால், அதுவே, சுத்தமான பெருங்காயம் என்றறியலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More