கடந்த காலங்களில் பெருமளவான ஈழத்தமிழர் படகுகளில் அவுஸ்திரேலியா செல்வதற்காக ஆழ்கடல் பயணம் மேற்கொள்வது வழமையாகிவிட்டது. மேலைத்தேச நாடுகள் தங்கள் கதவுகளை புதிய புதிய சட்ட வரைபுகளைக்கொண்டு இறுக்கி மூடிவருகின்றன. இதனால் மாற்றுப்பாதையை புகலிடக் கோரிக்கையாளர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
வழமைக்கு மாறாக கடந்த காலங்களில் இவர்களது பயணம் துன்பத்திலும் உயிர் இழப்புக்களிலும் முடிவடைவது கவலையான விடயமே. இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு இம்மாதம் 23 ஆம் திகதியன்று ஜாவாத் தீவு கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பலியானர்.
6 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 15 அகதிகளே உயிரிழந்தனர். இதில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இவ் விபத்தின் போது 200 பேர் வரை படகில் இருந்ததாக பொலிஸார் அறிவித்த போதும் படகில் 250 பேர் இருந்ததாக புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.