புதுடெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், இந்தியாவை வெட்கி தலைகுனியவும் வைத்தது.
இந்த பாலியல் பலாத்கார வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர் மற்றும் இளங்குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறார் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 11ஆம் தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.
அதன்படி இன்று நீதிபதி தனது தண்டனை தீர்ப்பை அறிவித்தார். குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.