கடந்த சனிக்கிழமை மாலை அஷ்வின் பிரேமகுமாரின் சங்கீத அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. வாய்ப்பாட்டு மற்றும் வயலின் இசை இரண்டிலும் தனது அரங்கேற்றத்தினை ஒரே மேடையில் ஒரே நாளில் செம்மையாக செய்திருந்தார்.
திருமதி சுகிர்தகலா கடாட்சம் மற்றும் திரு எல் நாகராஜு ஆகியோரின் மாணவனான அஷ்வின் பிரேமகுமார் தனது இசைத் துறையில் மேலும் வளர்ந்து தனது சங்கீத குருக்களின் வழிநடத்தலில் சாதனைகள் புரிய வேண்டுமென்பதே எல்லோருடைய வாழ்த்துக்களாகவும் அமைந்தன.
இவ் அரங்கேற்றத்தில் சிறப்பம்சமாக இடம்பெற்றவை அஷ்வின் பிரேமகுமார் தெரிவு செய்து பாடிய பாடல்களைக் குறிப்பிடலாம். அழகு தமிழில் செதுக்கியெடுத்த பாடல்களை கம்பீரமாகப் பாடினார். பிறமொழிப் பாடல்களை மட்டுமல்லாது தமிழ் கீர்த்தனைகளையும் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் அதிகமாக தெரிவுசெய்து பாட முன்வருவது பெரிதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மேலும் இவர் பாடிய “சங்கீத வீணையில் இசை……” என்ற பாடலின்போது அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். இவரது குருவான திருமதி சுகிர்தகலா கடாட்சம் அவர்கள் இவரது பாடல்களின் தெரிவில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். கடந்த காலங்களில் பல எழுச்சிப்பாடல்களை எழுதி இசையமைத்தவர் என்பதால் அந்த அனுபவச் செறிவு இந்த பாடல்களில் புலப்பட்டது.
இடைவேளையின் பின்னர் வயலின் இசை இடம்பெற்றது. அஷ்வின் பிரேமகுமார் வயலின் இசையிலும் நேர்த்தியாக கற்றுள்ளார் என்பதை அவரது முகத்தில் தெரிந்த தன்னம்பிக்கை குறியீடாகக் காட்டியது.