வடக்கில் தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனத்தை உடன் நிறுத்த அரசு துரித நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
-மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் உட்பட மனிதாபிமான பணியாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு தொடர்ச்சியாக புலனாய்துத் துறையினரினால் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக காணாமல் போன உறவுகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கே குறித்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்;டே செல்லுகின்றன. இவ்விடையம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால் உரிய முறையில் விசாரனைகளை செய்வதில்லை.
இதனால் காணாமல் போன உறவுகளுக்காக மேற்கொண்டு வரும் அமைதிபோராட்டங்கள் கூட கை விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புலனாய்வாளர்கள் இரவு நேரங்களிலே விசாரணைகளுக்காக வீடுகளுக்கு செல்லுகின்றனர்.
இதனால் பெண்கள் பாரிய அச்சத்தை எதிர் நோக்குகின்றனர். விசாரனைக்காக வீடுகளுக்குச் செல்லுகின்ற போது பெண் பொலிஸர் அழைத்துச் செல்லப்படாமல் பெண்களை விசாரணை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே செல்லுகின்றன.
இவர்கள் யார்? என்பது தெரியாத நிலையில் எவ்வித சீருடையும் இன்றி சிவில் உடையில் அரச புலனாய்வுத்துறை என சென்று விசாரனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
எனவே வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.