கடந்த 23-11-2013 மாலை 4.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் மேற்படி கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கவிதைத் தொகுப்பு தமிழ் மாமன்ற உறுப்பினர்களான மதுரகன் மற்றும் திலீபன் ஆகியோரால் படைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கவிஞர்கள் இருவரினதும் பெற்றோர்கள் மங்கள விளக்கின் சுடர்களை ஏற்றி சிறப்பித்தனர். தொடர்ந்து வரவேற்புரையினை இருளைப் படைத்தவர்களில் ஒருவருமான வைத்திய கலாநிதி பா.திலீபன் வழங்கி இருந்தார். இவ்விரு கவிஞர்களை பாடசாலைக் காலத்திலே தமிழ் மீது ஆர்வம் கொள்ள வைத்தவரான, கலாநிதி தமிழ்மணி அகளங்கன் முதன்மை உரையினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை உரையினை கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் வழங்கினார். “இருளைப் படைத்தல்” எனும் தலைப்பிற்கு ஒரு தெளிவான விளக்கத்தை, விளக்கமாகக் கொடுத்தார். தொடர்ந்து கௌரவ விருந்தினர் உரையினை, வைத்திய கலாநிதி சு.ரவிராஜ் மற்றும், வைத்திய கலாநிதி சி.சிவகணேஷ் என்போர் வழங்கினர். தமது மாணவர்களின் சிறப்புக்களை இவ்விருவரும் வழங்கி இருந்தனர். தொடர்ந்து, சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் உரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து வவுனியாவில் முதல் தடவையாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது. வாழ்த்துரையினை இலக்கியச் சுடர் ஐ.கதிர்காமசேகரன் வெளிப்படுத்தினார். இவரும் பாடசாலைக் காலங்களில் கவிஞர்கள் இருவரினையும் கவிதைகள் எழுத ஊக்குவித்தவர். நிகழ்ச்சிகளின் இடையிடையே தமிழ் மாமன்ற உறுப்பினர்களான துஸ்மன், சஜீந்திரா மற்றும் சார்ள்ஸ் ஆகியோரின் கவிதை நயத்தலும் இடம்பெற்றது. இறுதியாக ஏற்புரையும், நன்றி பகிரலும் இருளைப் படைத்தவர்களில் ஒருவரான வைத்தியகலாநிதி செ.மதுரகன் வழங்கி சிறப்பித்தார். தங்களை வளர்த்தவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.