சிறிலங்காவின் அண்மைய நிலவரங்களில் இருந்து பாடம் கற்றுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று நியுயோர்க்கில் இந்த ஆண்டின் இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதன்போது, “2013ம் ஆண்டில் உங்களால் முன்னெடுக்கப்பட்ட கொள்கை நகர்வுகளில் ஒன்றான, போருக்குப் பின்னர் சிறிலங்காவின் முன்னிலைத் திட்டம் குறித்து, நீங்களும், பிரதிப்பொதுச்செயலரும் பேசியிருந்தீர்கள். தற்போது இந்த திட்டம் செயற்பாட்டில் உள்ளதா? அது ஐ.நாவின் கொள்கையா? இன்றுகாலை பிரதிப்பொதுச்செயலரும் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும் சந்தித்துள்ளது குறித்து விபரம் தேவை? இருவருக்கும் இடையிலான எந்த உறவும் இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்,
“இந்த உரிமைகள் முன்னிலை நடவடிக்கைத் திட்டம், நாம் சிறிலங்காவின் அண்மைய நிலவரங்களில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பதை அடிப்படையாக கொண்டது. நான் ஒரு நிபுணர் குழுவை நியமித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக்குழு, ஐ.நா எல்லாவற்றையும் நிறைவேற்றியதா, சரியானமுறையில் செயற்பட்டதா என்று பார்க்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டது. நாம் ஒரு தீவிரமான உள்ளக ஆய்வை மேற்கொண்டோம். இதன் பெறுபேறாகவே, நாம் மிகவும் முக்கியமான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயமாக, இந்த செயல்திட்டம், குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது ஒரு விடயத்தையோ இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதல்ல. இது எல்லா நாடுகளுக்கும், எல்லா விவகாரங்களுக்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் பயன்படும். அதனால் தான், இதனை நான் ஐ.நா பொதுச்சபையில் எனது பலமான பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
ஐ.நா பொதுச்சபைத் தலைவர் உறுப்புநாடுகளுக்கு அதை விநியோகித்து வருகிறார். எனவே இது ஒரு மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், எந்த விவகாரத்திலும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதை தடுக்கவும், இது ஒரு வழிகாட்டியாக இருக்கும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த விடயம் தொடர்பாக, நான் எனது மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்