சமய பண்பாடுகள் நிறைந்த தெல்லிப்பழையில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கிருஸ்ணராஜா தெரிவித்தார். தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நடைபெற்ற சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாகுட்டியின் 89 ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழாவில் சிறப்புரையாற்றிய யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் தனது உரையில் கட்டுப்பாடுகள் நிறைந்த யாழ்ப்பாண சமூகத்தில் பிறந்த சிவத்தமிழ் செல்வி ஒரு பெண்ணாக இருந்து ஒழுக்கம் மற்றும் சமூக கடமை உணர்வோடு தானும் வாழ்ந்து தனது மகளிர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளையும் ஒழுக்கத்துடன் வளர்த்தார். சிவத்தமிழ் செல்வி அவர்கள் ஆன்மீகத்தை வாய்ப்பேச்சாக மட்டுமன்றி வாழ்ந்தும் காட்டியவர். சமயம் வேறு சமூகம் வேறு என்பதல்ல இரண்டுமே ஒன்றுதான் என வாழ்ந்து காட்டியவர் என்று குறிப்பிட்டார்.
இவ் விழாவில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிற்கும் வறிய மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. மேலும் வைத்திய கலாநிதி கந்தையா மாணிக்கம் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை கலாபூஷணம் சுப்பையா கணபதிப்பிள்ளை மற்றும் நாகலிங்கம் தவமணிநாயகம் ஆகியோருக்கு சிவத்தமிழ் விருது வழங்கப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் சான்றோர்கள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.